மதுரை மாவட்டம் மேலூர் அரசு மருத்துவமனையில் செவிலியராக பணி புரிந்து வந்தவர் திரு. கே. கார்த்திகேயன், 1993 - 1996 இல் செவிலிய பயிற்சி பெற்றவர். இவர் இன்று (23-10-2012) அதிகாலை சுமார் 12.30 மணியளவில் அகால மரணமடைந்தார்.



இரவு பணி புரிந்து வந்த செவிலியர் திரு. கார்த்திகேயன் அவர்களுக்கு கடந்த சில நாட்களாக காய்ச்சல், வாந்தி  இருந்து வந்துள்ளது. மிகவும் உடல் நிலை சரி இல்லாத நிலையில்  விடுப்பு எடுக்க இருந்தவருக்கு.

டெங்கு நோய் பரவுவதாலும், அரசு மருத்துவமனைக்கு அடிக்கடி அரசு அதிகாரிகள் ஆய்வு செய்வதாலும் செவிலியர்கள் யாரும் எவ்வித விடுப்பும்  எடுக்க கூடாது என அலுவலக சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது. இவருக்கும் இரவு பணியில் இருப்பதால் விடுப்பு எடுக்க கூடாது என கூறப்பட்டு உள்ளது.

22-10-2012 அன்று இரவு பணிக்கு வந்த செவிலியர் திரு. கார்த்திகேயன்  அவர்கள் மிகவும் உடல் நிலை சரி இல்லாத  நிலையில் 22-10-2012 அன்று  ஆய்வுக்கு வந்த இணை இயக்குனர் அவர்களிடம்  தனது நிலையை விளக்கி கூறி மருத்துவ விடுப்பு வழங்க கேட்டு உள்ளார். இணை இயக்குனரின் அனுதாபத்திற்கு பிறகு அவருக்கு விடுப்பு வழங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.


இரவு ஒய்வு எடுக்க வீட்டிற்கு சென்ற அவரின் நிலை மேலும் மோசமடைந்ததால் மதுரை அப்போலோ மருத்துவமனைக்கு அழைத்து செல்ல பட்டார். அங்கு அவரின் உயிர் சுமார் 12.30 மணிக்கு பிரிந்து விட்டது.

செவிலியர் திரு.கார்த்திகேயன் அவர்களுக்கு, மனைவி,  இரண்டு குழந்தைகள் (9 மற்றும் 12 வயது நிரம்பியவர்கள்) உள்ளனர்.

உடல் நிலை சரி இல்லாத ஒரு செவிலியருக்கு  விடுப்பு எடுப்பதை கூட இந்த நிர்வாகம் இரும்பு கரம் கொண்டு அடக்குகிறது.

"இறந்தாலும் இங்கு வந்து இறந்து போ!" என கூறும்  மனிதாபிமானம் அற்ற நிர்வாகிகள் இருக்கின்றனர்.

ஏன் இந்த நிலைமை :-

அரசு மருத்துவமனையில் பணி புரிவது செவிலியர்கள் மட்டுமே என்பது போல, செவிலியர்களின் பணி  அல்லாத பல பணிகள் செவிலியர்களுக்கு திணிக்கப்பட்டு அவர்களின் பணிப்பளு கூடிக் கொண்டே போகிறது.

ஆனால்  மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் விகிதத்திற்கு ஏற்ப செவிலியர்கள் பணி அமர்த்தப்படுவதில்லை.

ஷிப்டு  சிஸ்டத்தை ஒழித்துக் கட்ட அனைத்து நடவடிக்கைகளும்  மறைமுகமாக எடுக்கப்பட்டு வருகின்றன.

அனைத்து பணிகளை செய்யும் மல்டி பர்ப்பஸ் ஒர்க்கர் ஆக செவிலியர்கள் மாற்றப்பட்டு வருகின்றனர். அவர்களின் பணி எது? என வரை முறை இல்லாமல் 
பணி நேரம் ஒழுங்கு படுத்தப்படாமல் உள்ளது,
பணி பாதுகாப்பு இல்லாமல் செவிலியர்கள் பணிபுரிய வற்புறுத்தப்படுகின்றனர். 

யாருக்கோ தானே இந்த நிலை!
 எனக்கு இல்லை!?
-- என நினைக்கும் மன நிலை செவிலியர்களிடம் பரவி வருகிறது.

இதையும் தாண்டி  அடிப்படை உரிமைகளை கேட்கும் போது எல்லாம்  அரசு இயந்திரமும், நிர்வாகமும் இரும்பு கரம் கொண்டு ஒடுக்க பார்க்கிறதே ஒழிய,

செவிலியர்களின் நியாயமான உரிமைகளை தர எந்த ஒரு நிர்வாக நபருக்கும் விருப்பம் இல்லை எனலாம்.

மருத்துவமனை ஆய்வுகளுக்கு சோதனை எலிகளாய் இருப்பது இந்த செவிலியர்கள் தான்.

அங்கு ஏன் குப்பை?  நர்சுக்கு மெமோ கொடு.
இங்க ஏன் தண்ணி நிக்குது? வார்டு நர்ச சஸ்பெண்டு பண்ணு
அங்க ஏன் கக்கா பறக்குது?  இந்த நர்ச டிரான்ஸ்பர் பண்ணு
எனும் அதிகாரிகள் இருக்கிறார்களே தவிர 

100 நோயாளிக்கு ஏன் ஒரு செவிலியர்  பணி  பார்க்கிறார்? என கேட்பது இல்லை.
செவிலியருக்கு ஏன் 12 மணி நேரம் டியூட்டி போட்ட? என கேட்பது இல்லை.

மற்ற பணியார்களின் வேலையான மருந்து கொடுப்பது, இரத்தம் எடுப்பது, ரிப்போர்ட் போடுவது என அனைத்து பணிகளையும் செய்யும் ஒரு பணியாளனாய் செவிலியர்  உள்ளார். (இங்கு மற்ற பணியாளர்களை குறை கூற விரும்பவில்லை செவிலியர்களின்  பணியை குறிப்பிடுகிறேன்)

வேலை நடந்தால் போதும் என நிர்வாக அதிகாரிகள் உள்ளனரே தவிர
பணிப்பளு போன்ற செயல்களை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்க ஒருவரும் முயலுவது இல்லை.

செவிலியர்களே!!
இதோ இங்கு தனது தந்தை இறந்தது கூட தெரியாமல் தவிக்கும் இந்த குழைந்தகளுக்கு என்ன பதில் சொல்ல போகிறோம் நாம்.

நாளை தந்தை அற்ற பிள்ளையாய் தவிக்க போகும் இந்த குழைந்தையின் எதிர்காலம் என்ன?

இன்னும் எத்தனை பலிகள் நீங்கள் தர போகிறீர்கள் இந்த அடிமை செவிலியத்திற்கு.

செவிலிய  சமுகமே இந்த நிலை நாளை உனக்கும் வரலாம்.
உறங்குவது போல் நடித்தது போதும்
விழித்து எழு.



இவண்,
உமாபதி
"பின் குறிப்பு:-
இந்த கட்டுரை எனது தனிப்பட்ட கருத்துக்களே, இதனை என்னுடைய பணியுடனோ அல்லது நான் இருக்கும் அமைப்புடனோ சேர்த்து பார்க்க வேண்டாம்"